தலையங்கம்

 டாக்டர் ஹிமானா செய்யத்

Refer this Page to your friends


மகளிர் இட ஒதுக்கீடு: உள் ஒதுக்கீடு ... தாமதம் கூடாது!


கிட்டத்தட்ட 17 ஆண்டுகள் ரப்பராய் இழுக்கப்பட்டு திருமதி சோனியா காந்தியின் கடும் முயற்சியில், கலைஞர் போன்ற கூட்டணித் தலவர்கள், இடது சாரிகள், பிரதான எதிர்க்கட்சியான பாஜக உதவியுடன் மகளிருக்கு 33% இடஒதுக்கீட்டு மசோதா தாக்கலாகியிருக்கிறது. ராஜ்ய சபாவில் வாக்கெடுப்பும் நடந்து வெற்றி பெற்றிருக்கிறது. லோக்சபாவிலும் நிறைவேறி அது சட்டமாகிவிடும் என்ற நம்பிக்கை உறுதிப்பட்டிருக்கிறது.

லாலுவும், முலாயமும் முறையே பீஹார், உ.பி. மாநில முஸ்லிம்களின் பேராதரவில் ஆட்சியதிகாரம் பெறுவதற்கு வழியமைத்துக் கொண்டவர்கள். அவர்களாகவே 'தங்களுக்குத்தான் என்றைக்கும் முஸ்லிம்களின் ஆதரவு' என்று நினைத்துக் கொண்டு முஸ்லிம் விரோத சக்திகளுடனும் கொஞ்சிக் குலவத் தொடங்கிதன் காரணமாகவும், காங்கிரஸின் ராகுல் காந்தி போன்ற இளந்தலைவர்களின் வாக்குறுதிகளில் நம்பிக்கை பெற்று முஸ்லிம்கள் காங்கிரஸின் பக்கம் மீண்டும் தொடர்புகொள்ளத் தொடங்கியதாலும் அந்த ஆதரவை மீண்டும் பெறும் முயற்சியில் இருப்பவர்கள். எங்கே காங்கிரஸ் இந்த சட்டவடிவின் மூலம் தங்களை செல்லாக்காசாக்கிவிடுமோ என்ற பீதியில் அவைகளில் 'உள்ளொதுக்கீடு கோரி ' ஆர்ப்பாட்டம் செய்கின்றனர்; மசோதாவை எதிர்க்கின்றனர். ஆனால் 33% ஒதுக்கீடு நிறைவேறிய பிறகு முஸ்லிம்களுக்கும், தலித்களுக்கும் உள்ளொதுக்கீடு செய்துகொள்ளலாம் என்பது மத்திய அரசின் நிலை.

காலவரையறையின்றி இந்தப் பிரச்சினையைத் தள்ளிப்போடாமால் சட்டம் நிறைவேறிய சூட்டிலேயே உள்ளொதுக்கீடு பற்றிய கருத்துப் பரிவர்த்தனைகள் தொடங்கப் படவேண்டும். காலதாமதம் சிறுபான்மை முளிம்களுக்கும், தலித்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்திவிடும்.

இப்படிப்பட்ட வாக்குறுதிகளைக் கொடுப்பதும், பிறகு அதனை காலம் கடத்தி இழுத்தடிப்பதும் நிஜம்தான். பாபரி-மஸ்ஜிதை அக்கிரமமாக தகர்க்க மத்திய அமைச்சே உதவிவிட்டு -அதே இடத்தில் மஸ்ஜித் என்று அப்போதைய பிரதமர் நரசிம்மராவே வாக்குறுதியளித்து விட்டு- இடிக்கப்பட்ட சூட்டுடனேயே 'தறகாலிகக் கோயில்' என்று பெயரிட்டு பலத்த பாதுகாப்புடன் அதனை 18 வருடங்களாக இழுத்தடித்து வரும் தவறைச் செய்துவருவது ஒன்றும் ரகசியமான விசயம் அல்ல.
மறுபடியும் அத்தகைய தவறை மத்திய அரசு செய்யாது என்பது நமது நம்பிக்கை.

திருமதி சோனியாவும், பிரதமர் மன்மோகன் சிங்கும் தமிழ்நாடு சட்டமன்ற புதிய கட்டட திறப்புவிழாவில் கலைஞரைப் புகழ்ந்து பேசிய பேச்சுக்கள் உண்மையானவை என்பதை நம்பும் அந்த மக்கள் கலைஞர் உள்ளொதுக்கீட்டுப் பிரச்சினையை உடனே கையில் எடுப்பார் என்று நம்புகிறோம்!

 


இந்துத்துவம் - நாத்திகம்-பௌத்தம் -இஸ்லாம்
 




அல்லாஹ்வின் அடியானாய்
பேராசிரியர் பெரியார்தாசன் !

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) அண்ணன் அப்துல்லாஹ் அவர்களே!

மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் எனது 'கோடுகள் கோலங்கள்' நாவல் 1997-ல் மதரஸா மிஸ்பாஹ¤ல் ஹ¤தாவின் ஏற்பாட்டில் வெளியீடு கண்டது, டத்தோ டாக்டர் முகம்மது இக்பால் அவர்கள் தலைமையில்!

வேறு நிகழ்வுகளுக்காக மலேசியப் பயணம் வந்திருந்த தாங்கள் அந்த விழாவுக்கு ஏற்பாட்டாளர்கள் அழைக்காமலே வருகை தந்தீர்கள். அந்த விழாவில் பத்து நிமிடம் பேசவேண்டிய அவசியம் இருப்பதாகக் கூறி அனுமதி கோரினீர்கள். எதிர்பாராத இன்ப அதிர்ச்சியில் இருந்த ஹாஜி ஜவஹர் அன்ஸாரி அன்பழைக்க நீங்கள் சுமார் 15 நிமிட நேரம் உரையாற்றினீர்கள்.

உரையின் சுருக்கம், சகோதரர் டாக்டர் தாவூத் பாட்சா அவர்கள் அளித்த எனது படைப்பிலக்கிய நூல்கள் வழி தமிழ்முஸ்லிம் வாழ்வியல் உயிர்ப்புகளை நன்கு புரிய முடிந்ததாகவும், 'நம்பள்கி-நிம்பள்கி வாலாக்கள்தான் தமிழ் முஸ்லிம்கள்' என்ற தாக்கம் உடைந்து போனதாகவும் கூறி என்னை வாழ்த்தினீர்கள்!

15 ஆண்டுகள் கழித்து, கடந்த 3 நாட்களாக நூற்றுக்கணக்கான ஈமெயில்கள் -போன் கால்கள் தாங்கள் முறைப்படி ஒரு முஸ்லிமாகிவிட்ட செய்திகளைச் சுமந்தவாறு!
அல்ஹம்துலில்லாஹ்! தங்களது நேர்காணல்களை இப்போதுதான் முழுமையாகக் கேட்டேன்.

16 வயதில் பள்ளித்தோழன் சிராஜுத்தீன்- 2000-ம் ஆண்டில் அமீரகப் பயணம்- ஈமான் பேரவை- தாவூத் பாட்சா- ஐ.எ·ப்.டி. சிக்கந்தர்- ரஹ்மத் அறக்கட்டளை முஸ்தபா ஹாஜியார், கவிஞர் தண்ணன் மூஸா ........ இப்படி பலரது தொடர்புகளும், 'நாத்திக நம்பிக்கைப் படி இறைவன் இல்லாமலே போனால் பரவாயில்லை; இறைவன் இருந்துவிட்டால்? " என்ற பயம் ஏற்படுத்திய சிந்தனைகளாலும், சைவப் பிள்ளையாய் - பெரியார்தாச நாத்திகனாய்- பௌத்த சித்தார்த்த புத்திரனாய் பரிணாம வளர்ச்சி கண்டு இன்று ஒரிறைக் கொள்கையை உணர்ந்து புரிந்து - மொழிந்து நெகிழ்ந்து உருகி நிற்கும் உங்களுக்கு இந்தத் தம்பியின் சலாத்தை - அவனை கௌரவ ஆசிரியராகவும், தங்கை அனீஸ் பாத்திமாவை ஆசிரியராகவும் கொண்டு உலகத் தமிழ் நெஞ்சங்களை மாதந்தோறும் அரவணைக்கும் நர்கிஸ் மாத இதழின் சலாத்தினை ஏற்றுக் கொள்ளுங்கள்!

உங்களது எதிர்காலப் பயணத்தின் நோக்கங்கள் பற்றி நேர்காணலில் நேர்மையுடன் முன்வைத்த குறிப்புக்களில் பாசாங்கற்ற பண்பாட்டுச் சிதறல்களைப் புரிகிறோம்.

'கியாமத்து நாளில் உன்னையே துணைவியாய்ப் பெற ஆசிக்கிறேன்' என்று உங்கள் துணைவியாரிடம் கூறிய கூற்றைக் கேட்ட போது கண்கள் பனித்தன!


மீண்டும் ஒரு அன்பு முகமன், அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) அண்ணன் அப்துல்லாஹ் அவர்களே!

நன்றி : நர்கிஸ் மே - 2010 இதழ்


தலையங்கம் - தலைப்புப் பக்கம்

Refer this Page to your friends
 

Chittarkottai.com