بسم الله الرحمن الرحيم

ஷிர்கின் வாரிசுகள்

Refer this Page to your friends

ஷிர்கின் வாரிசுகள்
இது நூஹ் மற்றும் இப்றாஹீம் நபியின் சமுதாயத்தின் நிலைகளாகும்...............
இன்று கப்று வணங்கிகளிடம் எப்படி கப்றுகள் தர்ஹாக்களோடு தொடர்புகள் ஆரம்பித்தன? எப்படி அவைகள் ஷிர்கில் போய் முடிவடைகின்றன என்று பார்ப்போமானால் அவர்கள் சொல்வது அவர்களிடம் குடிகொண்ட பண்புகள், இறையச்சம் ஆகியவற்றின் ஈர்ப்பினால் அவர்களை பரிசுத்தப்படுத்தி புனிதப்படுத்தினார்கள்.

  • பின் அவர் அடக்கப்பட்ட இடத்தை தரிசிக்க ஆரம்பித்தார்கள்.
  • மரணத்தையோ, மறுமையையோ நினைவுகூர்வதற்காக தரிசிப்பதை விட்டு விட்டு அடக்கப்பட்ட ஷைகை நினைவு கூர்வதற்கும் அவரது புகழை நினைவு படுத்துவதற்கும் தரிசித்தார்கள்.
  • பின் அந்த இடத்தில் இருந்து அல்லாஹ்விடம் பிரார்த்தித்தால் அந்த இடத்தின்; அருளால்-பரக்கத்தால் ஏற்றுக் கொள்ளப்படும் எனும் நோக்கில்,
  • பின் கப்றை தொடுவது, அதை முத்தமிடுவது, அதை பரக்கத்துக்காக தடவுவது.
  • பின் அதை இடைத்தரகராக ஆக்குவது அல்லாஹவிடத்தில் பரிந்துரைக்கககூடிய சாதனமாக ஆக்குவது,
  • அங்கு அடக்கப்பட்டவரை தூய்மையானவர், சங்கையானவர், இறைவனின் நெருக்கத்தை பெற்றுத் தரக்கூடியவர், தம்மை பரிசுத்தப்படுத்தி வைக்கக்கூடியவர், அல்லாஹ்விடத்தில் பெருமதிப்புள்ளவர் என்று தமக்குத்தாமே கற்பனை செய்து கொண்டு தமது தேவைகளை முன் வைக்கின்றனர்.

இவர்கள் தங்களை பாவங்களில் மூழ்கியவராக இருப்பதால், அல்லாஹ்விடத்தில் நேரடியாக கேட்க முடியாது என்று எண்ணிக்கொண்டு, இங்கு அடக்கப்பட்டவர் எமக்கும் அல்லாஹ்வுக்கும் மத்தியில் இடைத்தரகராக இருந்து நமக்கு தேவையானவைகளை அல்லாஹ்விடம் பெற்றுத்தர வேண்டும் என்ற நோக்கில் அந்த கப்ருகளில் அடக்கப்பட்டிருப்பவர்களிடத்தில் தமது தேவைகளை முறையிட்டு அந்த எண்ணத்தில் செயற்படவும் ஆரம்பித்தார்கள்.

  • பின்பு ஷைத்தான் அங்கு வரக்கூடியவர்களிடம் சில சிந்தனைகளை ஏற்படுத்துவான்.
  • இங்கு அடங்கப்பட்டிருப்பவர் அல்லாஹ்விடத்தில் உயர்வானவராக இருக்கின்றார் என்றும், அல்லாஹ் பல ஆற்றல்களை இவருக்க வழங்கி இருக்கிறான் என்பன போன்ற சில ஷிர்கை ஏற்படுத்தும் சிந்தனைகளை உள்ளத்தில் து}வுகின்றான்;.
  • மேலும்; அவருடைய உள்ளத்தில் அதன் மீது இன்னும் பய பக்தி அதிகரிக்கும் படியும், அதன் மகத்துவம், உயர்வு அவரது உள்ளத்தினுள் அதிகரிக்கும் படியும் செய்கின்றான்.
  • பின்பு அதனிடம் நேரடியாக பிரார்த்திக்கவும் உதவிதேடவும் ஆரம்பிப்பார்கள்,
  • பின் அதன் மீது ஒரு மஸ்ஜித் கட்டப்படும், அதன் மீது ஒரு குப்பா கட்டப்பட்டு நவீன முறையில் அந்தக் கட்டிடம் வடிவமைக்கப்படும்.
  • பின்னர் அங்கு திரைகளை தொங்கவிடப்படும்.
  • எண்ணெய் விளக்குகள் ஏற்றப்படும் மக்கள் அதற்கு ஸஜுத் செய்வார்கள், அதை வலம் வருவார்கள், அதை தொட்டு முத்தமிடுவார்கள்,
  • அங்கு ஹஜ்ஜை நிறைவேற்றுவார்கள்,
  • அதற்கு அறுத்துப் பலியிடுவார்கள்,
  • அங்கு பல கராமாத்துகள்-அற்புதங்கள் நடந்ததாக கட்டுக் கதைகள் புனைவார்கள்.
  • ஒரு பெண் நல்லதொரு வாழ்க்கைத் துணைக்கிடைக்கவேண்டும் எனப் பிரார்த்தித்தால், சில வேளை அது அவளுக்குக் கிடைத்துவிடுகின்றது. இன்னொரு பெண் தனக்குக் குழந்தைப் பாக்கியத்தைக் கேட்டால் அதுவும் அவருக்குக்; கிடைக்கின்றது (இதெல்லாம் இறைவனின் நாட்டப்படிதான் நடக்கும் என்பதனை அறியாமல் இருக்கின்றனர்).
  • பின் அனைவரும் ஒருமித்த குரலில் யார் இங்கு அடக்கப்பட்டவரை தரிசிப்பாரோ அவர் நஷ்டம் அடைய மாட்டார்,
  • அதை சந்திப்பவர்களின் விருப்பங்கள் நிறைவு செய்யப்படுகின்றன, அவர்களது நாட்டங்கள் நிறைவேறுகின்றன போன்ற விளம்பரங்களைத் திரும்பத் திரும்ப சொல்வார்கள்.
  • ஒரு வியாபாரியிடம் நீங்கள் அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்யாமல் இங்கு அடங்கப்பட்டிருக்கும் ஷைகின் பேரில் சத்தியம் செய்கிறீர்களே? ஏன் எனக் கேட்;கப்பட்டது. அவர் அதற்கு இங்கு அல்லாஹ்வின் மீது செய்யப்படும் சத்தியங்கள் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது இங்கு அடங்கப்பட்டிருக்கும் பெரியாரின் பெயரில் என்று சத்தியம் செய்யும் போது தான் மக்கள் அதனை ஏற்றுக் கொள்கிறார்கள், உண்மைப்படுத்துகின்றார்கள் என்று அவர் கூறினார். என்ன ஆச்சரியம் பாருங்கள்.
  • இவர்கள், இந்தக்கப்ர் வாசிகளை, அல்லாஹ்வை விட எவ்வளவு உயர்வுபடுத்தியுள்ளார்கள்.
  • வியம் இந்தளவுக்குச் சென்றதன் பின்னர் இவர்கள் கல் மண்ணால் செய்யப்பட்ட மாற்று மதத்தவர்கள் வணங்கும் சிலைகளை வணங்குவதற்கும், இந்தக் கப்ர்களை வணங்குவதற்குமிடையில் என்ன வேறுபாடு இருக்கின்றது. ஒரு வேறுபாடும் இல்லை (அவர்கள் நிற்கவைத்து வணங்குகின்றனர்;, இவர்கள் படுக்க வைத்து வணங்குகின்றனர்)


இவர்களின் உண்மையான நிலை பற்றி அபூ ரஜாஉல் அதாரிதி (ரலி) அவர்கள் அறிவிக்கக்கூடிய ஜாஹிலிய்யாக் காலத்தில் நிகழ்ந்த சில நிகழ்வுகளை இங்கு குறிப்பிடுவது பொறுத்தமாக இருக்கும் என நினைக்கின்றேன்.


அவர்கள் கூறுகின்றார்கள், 'நாம் அறியாமைக் காலத்தில் சிலைகளையும் கற்களையும் மரங்களையும் வணங்கக்கூடியவர்களாக இருந்தோம், நாம் வணங்கக்கூடிய கல்லை விட அழகான ஒரு கல்லைப் பெற்றுக்கொள்ளும் போது நம்மிடமுள்ளதை எறிந்து விட்டு அதை எடுத்துக் கொள்வோம்;;;;;. (அதை வணங்குவோம்). நாம் ஒரு கல்லையும் பெற்றுக் கொள்ளாத போது மண்ணால் ஒரு உருவத்தை அமைத்து, ஆட்டின் பாலை அதன் மீது கறக்கச்செய்து அம்மண்ணைக் குழைத்து வடிவமாக்கி பின் அதை வலம் வருவோம்.

நாம் ஒரு தடவை பிரயாணத்தில் இருக்கும் போது நாம் வணங்கக்கூடிய கடவுள் நம்முடன் இருந்தது, அக் கல்லை நாம் வெளியில் எடுத்து வைத்தோம், நாம் உணவு தயாரிப்பதற்காக நெருப்பை எரித்தோம். உணவுப் பாத்திரத்தை வைப்பதற்கு மூன்றாவது ஒரு கல் கிடைக்காத போது நமது கடவுளை அந்த இடத்தில் வைத்தோம், நெருப்பின் சூட்டை அது தணித்து மிதமாக்கி நாம் நெருப்பை நெருங்கும் போது நம்மைத் தாக்காது அது காக்கும் என்று நாம் கூறிக் கொள்வோம்.


ஒரு நாள் ஒரு இடத்துக்குச் சென்றோம், நம்முடன் கல்லையும் எடுத்துக் கொண்டோம் நாம் பிரயாணித்துக் கொண்டிருக்கும் போது நமது கூட்டத்தில் ஒருவர் உரத்தக்குரலில் உமது இறைவனைக் காணவில்லை எங்கோ விழுந்து விட்டது அதைத் தேடுங்கள் என்று சத்தமிட்டார். உடனே நாங்கள் அனைவரும் எமது வாகனங்களை மறுபக்கம் திருப்பி சிரமத்துக்கும், கஷ்டத்துக்கும் மத்தியில் எமது கடவுளைத் தேட ஆரம்பித்தோம். நாம் அதைத் தேடிக் கொண்டிருக்கும் போது நமது கூட்டத்தில் மற்றொருவரின் குரல் கேட்கிறது நான் உங்களது கடவுளைபப் போன்ற மற்றொரு கடவுளைக் கண்டுபிடித்து விட்டேன் என உரக்கக் கூவினார். உடனே நான் எனது பயணக்கூட்டத்தினர் தங்கியிருந்த இடத்திற்கு வந்தேன்.

அங்கு எனது கூட்டத்தினர் அவ்விடத்தில் கிடந்த மற்றொரு கல்லைப் பொறுக்கி வைத்துக் கொண்டு அச்சிலைக்கு முன்னால் சிரம் பணிந்து ஸஜ்தாச் செய்வதைப் பார்த்தேன், பின்னர் அதன் முன்னிலையில் ஒரு ஒட்டகத்தை அறுத்துப் பலியிட்டோம்.


இஸ்லாத்திற்கு முன் காணப்பட்ட அறியாமைக் கால நிகழ்வுகளைக் காணும்போது ஆச்சிரயமாக இல்லை! ஆனால் அதை விட இன்று காணப்படும் அறியாமையைக் கண்டு ஆச்சரியப்பட வேண்டியிருக்கிறது. அல்லாஹ்வின் மீது ஆணையாகக் கேட்கிறேன். கல்லை வணங்குவதற்கும் கப்ரை வணங்குவதற்கும் என்ன வித்தியாசம் இருக்கிறது? சிலைகளுக்கு முன்னால் தேவைகளைக் கேட்பதற்கும், உக்கி மண்ணோடு மண்ணாகிப்போன எலும்புகளிடம் தேவைகளைக் கேட்பதற்கும் என்ன வித்தியாசம் இருக்கிறது? அடங்கப்பட்ட அவ்லியாக்களை வணங்குவதற்கும் தண்ணீர் மண் கலந்து செய்யப்பட்ட சிலை (அல்லது கல் சிலை) ஒன்றுக்கு வணக்க வழிபாடுகள் செலுத்துவதற்கும் மத்தியில் என்ன வேறுபாடு இருக்கிறது.

ஆம்! அவர்கள் அனைவரும் கற்பிக்கும் நியாயம் 'நாம் அவர்களை வணங்கவில்லை அவர்கள் நமக்கும் அல்லாஹ்வுக்கும் மத்தியில் உள்ள இடைத்தரகர் மாத்திரமே". கப்று வணங்கிகள் நிச்சயமாக தெளிவான சிலை வணக்கத்திலேயே இருக்கிறார்கள் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை.

நான்கு எதிர்வாதங்கள்
முதலாவது: கப்று வணங்கிகள் சிலர் கூறுவது, நீங்கள் எங்களுக்கெதிராகக் கடுமையான ஒரு போக்கைக் கையாளுகிறீர்கள். நாம் இறந்தவர்களை வணங்கவில்லை, எனினும் அங்கு அடக்கப்பட்டுள்ளவர்கள் நல்லடியார்கள், அவர்களுக்கு அல்லாஹ்விடத்தில் ஓர் உயர்ந்த அந்தஸ்து இருக்கிறது அவர்கள் நமக்குப் பரிந்துரை செய்து நமது தேவைகனை அல்லாஹ்விடம் கேட்டுப் பெற்றுத் தருகின்றார்கள் என்று கூறி தமது செயலை நியாயப் படுத்துகின்றனர்.


நாம் சொல்கிறோம், சிலைகளை வணங்கிய மக்கா குறைஷிகள் சொன்னதும் இதைத்தான், அவர்கள் செய்த ஷிர்க்கும் இதுதான். அரபுத் தீப கற்பத்தில் வாழ்ந்த இணைவைப்பாளர்கள் தௌஹீதுர் 'ருபூபிய்யா" எனும் படைத்தல் காத்தல், பரிபாலித்தல் உணவளித்தல் போன்றவற்றை அல்லாஹ் ஒருவன் மாத்திரம் நிறைவேற்றிக் கொண்டு இருக்கிறான் இவ்விடயத்தில் அவனுக்கு நிகராக எவனும் இல்லை என்பதை உறுதியாக நம்பினார்கள்.
அல்லாஹ் தனது திருமறையில் கூறுவதைப் போன்று, 'நபியே நீர் அவர்களிடம் (காபிர்களிடம்) வானத்தில் இருந்தும், பூமியில் இருந்தும் உங்களுக்கு உணவளிப்பவன் யார்? உங்களுக்குப் பார்வையையும் செவிப் புலன்களையும் தந்தது யார்? மரணித்தவர்களை உயிர்பிப்பவனும், உயிரோடு உள்ளவர்களை மரணிக்கச் செய்பவனும் யார்? உலக பரிபாலனங்களை நடத்துபவன் யார்? என அவர்களிடம் நீர் கேட்டால் அவர்கள் 'அல்லாஹ்தான்" எனக் கூறுவார்கள்... அப்படியானால் அல்லாஹ்வுக்கு நீங்கள் அஞ்ச வேண்டாமா?" (யூனுஸ் 10: 31)
 

இப்படி இவைகளை ஏற்றுக் கொண்ட அந்த மக்களோடுதான் அல்லாஹ்வின் தூதர் போர் புரிந்தார்கள், அவர்களது இரத்தத்தையும் சொத்துக்களையும் சுவீகரித்தார்கள். ஏனெனில் அவர்கள் தமது வணக்க வழிபாடுகளின் மூலம் அல்லாஹ்வின் தனித்துவத்தை உறுதி செய்யவில்லை. மாறாக வேறு பொருட்களையும் அவனுக்கு இணையாக ஆக்கினார்கள். அல்லாஹ்வின் இறை வேதமும், நபியின் பொன் மொழிகளும், அல்லாஹ் அல்லாதவர்களுக்கு வணக்க வழிபாடுகளை செலுத்தப்படுவதை வன்மையாக எச்சரித்துக்கொண்டிருக்கிறன.
அல்லாஹ்வுக்கு இணைகற்பித்தல் என்றால் என்ன? என்பது நன்கு தெளிவுபடுத்தப்பட்டு விட்டது. அடியான் அல்லாஹ்வுக்கு இணையாக ஒன்றை வணக்க வழிபாடுகளில் ஆக்குகிறான் அது சிலையாக அல்லது கல்லாக, அல்லது நபியாக, அல்லது கப்ராக எதுவேண்டுமானாலும் இருக்கலாம். அல்லாஹ்வுக்கு மாத்திரம் செலுத்தப்படவேண்டிய வணக்க வழிபாடுகளை வேறு எதற்கும் செலுத்தும் போது அது ஷிர்காக மாறுகிறது பொதுவாக அது மற்றவர்களுக்கு செய்யப்படும் போது அறியாமைக் காலத்தில்; அவர்கள் சிலைகளை நாடியது போல், இவர்கள் நல்லடியார், கப்று, தர்ஹா போன்றவற்றை நாடிச் செல்வதாகவே கருதப்படும். அதுதான் உண்மையும் கூட.


இன்றைய காலத்தில் புதிதாக ஒரு பிரிவினர் தோன்றிவிட்டார்கள், அவர்கள் அல்லாஹ்வுக்கு மனைவியையும் பிள்ளைகளையும் கற்பிக்கின்றனர் (இவர்களைவிட்டும் அல்லாஹ் நம்மை பாதுகாப்பானாக). அவர்களது சட்டம் கிறிஸ்துவர்களுக்கு வழங்கப்பட்ட சட்டமேயாகும், கிறிஸ்தவ கொள்கைக்கு எதிராக என்ன வசனங்கள் அருளப்பட்டனவோ அதே வசனங்கள் தான் அவர்களுடைய வியத்திலும் நடைமுறைபடுத்தப்படும். அவர்கள் தங்களை கிறிஸ்தவர்கள் என அழைக்காவிட்டாலும் சரியே! இன்று கப்றுகளை வழிப்படுபவர்களும் அவ்வாறு தான்.


இரண்டாவது: கப்றுகளை வழிப்படக்கூடியவர்கள் வைக்கும் மற்றொரு வாதம், இங்கு அடங்கப்பட்டிருக்கும் நல்லடியார்கள் நமக்கு பரிந்துரை செய்யவேண்டும் என்பதற்காக அவர்களின் நெருக்கத்தைப் பெறத்தானே நாம் முயற்ச்சிக்கிறோம், அங்கு அடக்கப்பட்டிருப்பவர்கள் உயர்ந்த நல்லடியார்கள் அவர்கள் உயிருடன் இருக்கும் பொழுது பகல் காலங்களில் நோன்பிருந்தார்கள், இரவு காலங்களில் கண்ணீர் வடிக்கக்கூடியவர்களாக இருந்தார்கள், அல்லாஹ்விடத்தில் அவர்களுக்கு பெருமதிப்பும் உயர்வும் இருக்கிறது. நாம் அவர்களிடத்தில் வேண்டிக் கொள்வது நமக்கு அல்லாஹ்விடத்தில் பரிந்துரை செய்யுங்கள் என்று தானே, என அங்கலாய்க்கின்றனர்.


நாம் சமாதிகளை வழிபடக்கூடியவர்களுக்கு சொல்வது, உங்களுக்குக் கேடு! அல்லாஹ் உங்களின் பிரார்த்தனையை ஏற்றுக்கொள்ளக்கூடியவனாக இருக்கிறான், அவனை மாத்திரம் விசுவாசியுங்கள், பரிந்துரைக்கக்கூடிய இடைத்தரகர்களை நீங்கள் ஆக்கிக் கொள்வதைத்தான் அல்லாஹ் ஷிர்க் எனும் கொடிய பாவம் எனச் சொல்கிறான்.


இதனை அல்லாஹ் தனது வேதத்தில் கூறுகின்றான், 'மேலும் அல்லாஹ்வையன்றி, தங்களுக்கு தீமையோ, நன்மையோ அளிக்காதவற்றை அவர்கள் வணங்குகிறார்கள். இவர்கள் அல்லாஹ்விடத்தில் எங்களுக்கு பரிந்துரையாளர்கள் என்றும் அவர்கள் கூறுகின்றனர், (ஆகவே நபியே! நீர் அவர்களிடம்) வானங்களிலோ, பூமியிலோ அல்லாஹ்வுக்குத் தெரியாதவைகளை நீங்கள் அவனுக்கு அறிவிக்கின்றீர்களா? (அவனோ யாவற்றையும் நன்கறிந்தவன்) அவன் மிகப் பரிசுத்தமானவன் அவர்கள் இணைவைப்பவர்களை விட்டும அல்லாஹ்; உயர்வடைந்து விட்டான் என்று கூறுவீராக." (யூனுஸ் 10: 18)


நாம் இன்னும் அவர்களிடம் சொல்லிக் கொள்வது, அல்லாஹ் நபிமார்களுக்கும் நல்லடியார்களுக்கும் பரிந்துரைக்கும் அதிகாரத்தைக் கொடுத்திருக்கின்றான் என்பதை நாமும் உங்களுடன் இணைந்து ஏற்றுக் கொளகிறோம், ஆம் அவர்கள் அல்லாஹ்வுக்கு நெருக்கமானவர்கள் தான் (நல்லடியார்கள் என எவரையும் நாம் அடையாளம் காட்ட இயலாது!) எனினும் அதே நாயன் அவர்களிடம் பிரார்திப்பதையும் இறைஞ்சுவதையும் தடுத்திருக்கிறான்;. ஆம் நபிமார்களுக்கும், நல்லடியார்களுக்கும் பரிந்துரைக்கமுடியும், எனினும் அவர்கள் நாடியவர்களை பரிந்துரைப்பதற்கும், அவர்கள் நாடியவர்களை விடுவதற்குமான அதிகாரம் அவர்கள் கைகளில் கிடையாது. அல்லாஹ்வின் அனுமதியின்றி எவரையும் நாளை மறுமையில் அவர்களால் பரிந்துரைக்க முடியாது. இன்னும் பரிந்துரைக்கப்படுபவர் அவனால் பொருந்திக்கொள்ளப் பட்டவராகவும் இருத்தல் மிக அவசியமாகும்.


மூன்றாவது: சமாதிகளை வழிபடக்கூடியவர்கள் முன்வைக்கும் மற்றொரு வாதம், முஸ்லிம்களில் பெரும்பாலானவர்கள் கடந்த கால வரலாற்றிலும் சரி, தற்பொழுதும் சரி கப்றுகள் மீது கட்டிடம் எழுப்பியிருக்கிறார்கள். அவைகளை தர்ஹாக்களாக தரிசிக்கும் இடங்களாக ஆக்கியிருக்கிறார்கள், அங்கு பிரார்த்தனைகள் செய்திருக்கிறார்கள். அப்படியானால் ஒட்டுமொத்த சமுதாயமும் வழிகேட்டில் இருக்கிறார்களா? நீங்கள் மாத்திரம்தான் சத்தியத்தில் இருக்கின்றீர்களா? என்று எதிர் வினாத் தொடுக்கின்றனர். நாம் அவர்களுக்கு சொல்லிக் கொள்வது, இந்தக் கப்றுகள் சமாதிகளில் பெரும்பாலானவைகள் போலியானவைகள், எந்த அடிப்படையுமின்றி அவைகளை சிலருடன் தொடர்பு படுத்தப்படுகிறது. அவைகள் முன்னால் விரிவாக பேசப்பட்டுள்ளன. சமாதிகளைக் கட்டுவதும் அவைகளிடம் பிரார்த்திப்பதும் அல்லாஹ்வுடைய சொல்லுக்கும், நபியுடைய வழிமுறைக்கும் மாற்றமானது, நிராகரிக்கப்படவேண்டிய நூதனங்கள்-அனாச்சாரங்கள், ஷிர்க்கின் வாயல்களை திறக்கும் காரியங்கள் ஆகும். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள் 'யூதர்களுக்கும், கிறிஸ்தவர்களுக்கும் அல்லாஹ்வின் சாபம் உண்டாவதாக அவர்கள் நபிமார்களின் கப்றுகளை மஸ்ஜித்களாக ஆக்கிக்கொண்டார்கள் என அவர்கள் செய்ததை எச்சரிக்கை செய்தார்கள்".
(முத்தபகுன் அலைஹி).


நான்காவது: அவர்களின் சிலரது உள்ளத்தில் ஷைத்தான் ஏற்படுத்திய ஒரு சந்தேகம் யாதெனில் நபியுடைய கப்று மஸ்ஜிதுந் நபவியில் எந்தத்தடையுமின்றி அமைக்கப்டிருக்கின்றது. பள்ளியில் கப்ர் அமைத்தல் தடையாக இருந்திருந்தால் அங்கு அவர்கள் அடக்கம் செய்யப்பட்டிருக்க மாட்டார்களே! நபியுடைய கப்ரின் மீது குப்பாவும் அல்லவா எழுப்பப்பட்டுள்ளது என்று அவர்கள் தமது ஐயத்தை வெளிப்படுத்துகின்றனர்.
இவர்களுக்கான பதில்: நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் உயிர் எந்த இடத்தில் கைப்பற்றப்பட்டதோ அதே இடத்தில் தான் அவர்கள் நல்லடக்கம் செய்யப்பட்டார்கள். நபிமார்கள் எந்த இடத்தில மரணிப்பார்களோ, அதே இடத்தில் அடக்கம் செய்யப்படுவார்கள் என்பது நபிமொழி, அவ்வாறே நபி (ஸல்) அவர்கள் ஆயிஷா (ரலி) வீட்டில் மரணித்தார்கள் அங்கேயே நல்லடக்கம் செய்யப்பட்டார்கள். மஸ்ஜிதில் அவர்கள் அடக்கம் செய்யப்படவில்லை அவர்கள் அடக்கப்பட்டது வீட்டில் (அறையில்) இது முதலில் கவனிக்கப்பட வேண்டிய வியம்.


நபித்தோழர்களான அபூபக்கர் ஸித்திக் (ரலி) மற்றும் உமர் (ரலி) ஆகியவர்கள்- ஆயிஷா (ரலி) வீட்டில் அடக்கம் செய்யப்பட்டதற்குக் காரணமே பின்னாளில் அவ்விடத்தில் மஸ்ஜிதாக ஆக்கப்படக் கூடாது என்பதற்காகத்தான் என்பதனையும் கவனத்தில் கொள்ளவேண்டும். ஆயிஷா (ரலி) அறிவிக்கக்கூடிய ஒரு ஹதீஸில்;, நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எந்த நோயால் பீடித்து மரணித்தார்களோ அந்த நோயில் இருக்கும் போது சொன்னார்கள்: 'யூதர்களுக்கும், கிறிஸ்தவர்களுக்கும் அல்லாஹ்வின் சாபம் உண்டாவதாக அவர்கள் நபிமார்களின் கப்றுகளை மஸ்ஜித்களாக ஆக்கிக்கொண்டார்கள்"
ஆயிஷா (ரலி) கூறுகிறார்கள், 'நபியுடைய கப்றும் ஒரு மஸ்ஜிதாக ஆக்கப்பட்டு விடுமோ என்பதைப் பயந்து தான் அவர்கள்" இப்படிச் சொன்னார்கள். (புஹாரி, முஸ்லிம்)
 

கிழக்குப் பகுதியால் மஸ்ஜிதுன் நபவியுடன் தொடர்பு பட்டிருந்த ஆயிஷா (ரலி) வீட்டில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நல்லடக்கம் செய்யப்பட்டார்கள். வருடங்கள் உருண்டோடின மனிதர்கள் இஸ்லாத்தில் பிரவேசிப்பதும் அதிகரித்துக் கொண்டே சென்றது. எனவே காலத்தின் தேவையை உணர்ந்து அன்றைய முஸ்லிம் ஆட்சியாளர்கள் மஸ்ஜிதை கப்றுள்ள பகுதியைத்தவிர அனைத்துப் பகுதியிலும் விரிவு படுத்தினார்கள். மேற்கு, தெற்கு, வடக்கு என அனைத்துப் பகுதியும் விரிவுபடுத்தப்பட்டது. கிழக்குப் பகுதியை விரிவு படுத்தாததற்குக் காரணம் அந்தப் பக்கம் அவர்களின் கப்ர் அமைந்திருந்ததே. இதன் பின்னர் ஹிஜ்ரி 88-வது வருடத்தில் அதாவது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மரணித்து 77 வருடங்களுக்குப் பிறகு மதீனாவில் வாழ்ந்த அனைத்து ஸஹாபாக்களும் மரணித்து விட்டதன் பின், வலீத் இப்னு அப்துல் மலிக் எனும் ஆட்சியாளர் மஸ்ஜிதுன் நபவியை விரிவு படுத்துவதற்காக அதை இடிக்குமாறு பணித்தார், அனைத்துப் பகுதியையும் விரிவுபடுத்துமாறு கட்டளையிட்டார். நபி (ஸல்) அவர்களின்;, அனைத்து மனைவிமார்களின் வீடுகள் அமைந்திருந்த பகுதிகளும் அந்த எல்லைக்குள் வந்தன, கிழக்குத் திசையால் விரிவுபடுத்தப்படும் போது ஆயிஷா (ரலி) அவர்களது வீடும் பள்ளிவாசலின் எல்லைக்குள் வந்துவிட்டது. இதனால் கப்று மஸ்ஜிதுக்குள் வந்து விட்டது. இது நபியவர்களின் மஸ்ஜித்தினுள் கப்ரு வந்த வரலாறாகும்.


ஸஹாபாக்களின் காலத்துக்குப் பின் நிகழ்ந்த இவ் வியத்தை எவரும் ஆதாரமாகக் கொள்ள முடியாது இது ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களுக்கும் முன்னோர்களின் விளக்கத்துக்கும் மாற்றமானதாகும். வலீத் இப்னு அப்துல் மலிக் தவறிழைத்துவிட்டார். அல்லாஹ் அவரை மன்னிப்பானாக, நபிகளாரின் அறை மஸ்ஜிதுக்குள் நுழைத்த காரணத்தால் இத் தவறு நிகழ்ந்தது. ஏனெனில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கப்றுகள் மீது மஸ்ஜித்கள் எழுப்பப்படுவதை முற்றாகத் தடுத்திருக்கிறார்கள். அப் பகுதியை விட்டுவிட்டு ஏனைய மூன்று திசைகளிலும் மஸ்ஜிதை விரிவு படுத்தியிருக்கலாம் அது அவரால் நிகழ்ந்த தவறு.
அவ்வாறே நபியின் கப்று மீது இருக்கும் குப்பா, அது நபியோ, ஸஹாபாக்களோ தாபிஈன்களோ, தபஉத் தாபிஈன்களோ மற்றும் சமுதாயத்தின் அறிஞர்களோ இமாம்களோ கட்டியதல்ல. மாறாக அது மிஸ்ருடைய பிந்திய ஆட்சியாளர்களின் புதல்வர்களால் கட்டப்பட்டது. அதாவது மலிக் மன்ஸர் எனப்படும் கலாவுனுஸ் ஸாலிஹி என்பவர்தான் இதனை ஹிஜ்ரி 678 ல் கட்டினார்.
  

இன்ஷா அல்லாஹ் தொடரும்...

தர்ஹாக்களில் என்ன நடைபெறுகிறது?

மற்றப்பகுதிகள்

Refer this Page to your friends